ரளா, இயற்கையின் அன்னை மடியாய், தண்ணீர் தேசமாய் பரந்து விரிந்திருக்கிற பிரதேசம். நண்பர்களோடு நாங்கள் சென்றபோது அந்தச்சுற்றுலா இவ்வளவு இனிமையாக இருக்குமென்று நாங்கள் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை. பயண ஏற்பாடுகளை ட்ராவல்மேட் நிறுவனம் கவனித்துக் கொள்ள திருப்பூரிலிருந்து எட்டு பேருந்துகளில் கிளம்பினோம். மொத்தம் மூன்று நாட்கள் சுற்றுலா. முதல்நாள் ஆலப்புழாவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
அந்த ஹோட்டலுக்குள் நுழைந்த எங்களுக்கு ஆனந்த வரவேற்பு காத்திருந்தது. பத்திற்கும் மேற்பட்ட செண்டை வாத்தியக் கலைஞர்கள் தங்கள் தாளத்தால் எங்கள் அனைவரையும் வரவேற்றனர். அறைக்கு வந்து குளித்து காலை உணவிற்கு கீழே வந்தபோதும் கேரளக் கலைஞர்களின் செண்டை மேளம் உள்ளத்தை கவர்ந்தது. கேரள உணவு வகைகளும், தமிழக உணவு வகைகளும் பரிமாறப்பட்ட காலை உணவை முடித்து விட்டு ஹோட்டலில் இருந்து புறப்பட்டோம்.
ஹோட்டலிருந்து கிளம்பிய பேருந்து சென்று சேர்ந்தது, நீர் விளையாட்டில் புகழ் பெற்ற விளையாட்டுப்பூங்காவான வீகா லேண்டிற்கு. நண்பர்கள் உற்சாக மானார்கள். குழந்தைகள் போல ஒவ்வொரு விளையாட்டிலும் பங்கேற்று களிப்படைந்தார்கள்.
மதிய வேளை கேரள வகை உணவு அங்கேயே அருந்தினோம். தொடர்ந்து நீர் விளையாட்டுக்களில் ஆடிக் களைத்து திரும்பவும் ஹோட்டலுக்கு வந்த போது, பாதி இரவு கடந்திருந்தது.
அடுத்த நாள் காலை சற்று முன்னதாகவே தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி இருந்தார்கள் சுற்றுலா நிறுவனத்தினர். அன்று அவர்கள் அழைத்துப்போனது ஆலப்புழா படகுத் துறைக்கு. ஒவ்வொரு படகும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரும் மாளிகைகள். அழகான அறைகள், குளியல் மற்றும் கழிப்பறை வசதிகளோடு உருவாக்கப்பட்டிருந்தன. பயணிகள் எண்ணிக்கைக்குத் தக்கபடி படகுகள் விதவிதமாக காத்திருந்தன.
எங்கள் குழுவினரின் எண்ணிக்கை பதினைந்து. எனவே அதற்கேற்றபடி ஒரு பெரிய படகு இல்லம் ஒன்றில் நாங்கள் ஏறினோம். எல்லோரும் ஏறி அமர்ந்தபிறகு மெல்ல நகர்ந்தது அந்த படகு வடிவிலான சொர்க்கம்.
ஆலப்புழாவில் உள்ள அந்த ஏரி கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது என்றார் படகோட்டி. முதலில் கடலில்தான் பயணிக்கப் போகிறோம் எண்ணியிருந்தோம். ஆனால் அது ஏரி என்று அவர் சொன்ன பிறகுதான் தெரிந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை தண்ணீர்தான். படகு இல்லங்களின் வாடகை அதன் அளவிற்கேற்றாற் போல் மாறுபடுகின்றது. முற்பகல் தொடங்கி, அடுத்த நாள் காலைவரை படகு இல்லத்திலேயே தங்கும்படி எங்களுக்கு அந்தப்படகு இல்லம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
ஏரியின் உட்புறம் செல்லச் செல்ல அதன் அகலம் தெரிந்தது. மலையாளிகள் இயற்கையை பராமரிக்கும் அற்புதம் அங்கே புரிந்தது. அந்த ஏரியில் படகுப் போக்குவரத்தும் நடைபெறுகிறது. கோட்டயம் தொடங்கி ஆலப்புழா வரைக்கும் செல்லும் பயணிகள் படகொன்று எங்கள் படகை கடந்து சென்றது.
எதிரிலும் பக்கத்திலும் வந்து கொண்டிருந்த பல படகுகளில் உள்நாட்டினர், வெளிநாட்டினர் என்று பல விதமான மக்கள் அந்த இயற்கைச்சூழலை ரசித்தபடி பயணித்துக் கொண்டிருந்தனர்.
பயணம் தொடங்கி நாங்கள் எங்கள் உடைமைகளை அவரவர் அறைகளில் வைத்துவிட்டு படகிலிருந்த பால்கனியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, அருமையானதொரு எலுமிச்சை பழச்சாறு கொடுத்தார்கள் படகுப் பணியாளர்கள். நாங்கள் சென்ற படகில் படகோட்ட ஒருவர், சமையல் வேலைக்கு இருவர், படகைப் பராமரிக்க ஒருவர் என நான்கு பணியாளர்கள் இருந்தனர்.
மதியம் மீனுடன் கேரளச் சாப்பாடு உண்டோம். படகுகளில் டிவி பெட்டிகள் டிஷ் ஆன்ட்டெனா சகிதம் இருந்தன. இயற்கையை ரசித்துப்பார்ப்பதை விட்டு விட்டு எதற்கு வழக்கமாய்ப் பார்க்கிற டிவி என்று நண்பர்களோடு உரையாடிக் கொண்டும், எதிரில் வந்த படகிலிருந்த பயணிகளைப் பார்த்து கையசைத்து எங்கள் உற்சாகத்தை பகிர்ந்தபடியே பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம். இரவில் தங்கும் படகுகள் ஏரியின் நடுவில் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த கரைகளில் ஓரங் கட்டி நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.
பேருந்துப்பயணத்தில் இடையே உணவு மற்றும் தேநீருக்கு நின்று போவதைப் போல அந்த ஏரியில் அங்கங்கே கடைகள் இருந்தன. மீன்கள், பேக்கரிப் பொருட்கள், இளநீர் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களும் இருந்தன.
நாங்கள் வந்த படகும் சிறிதுநேரம் இது போன்ற கடைகள் நிறைந்த கரையொன்றில் ஒதுங்கி நின்று இளைப் பாறியது. எங்கள் படகைப்போலவே பல படகுகளும் அங்கே நிறுத்தப் பட்டிருந்தன. நண்பர்கள் குளிர்பானங்கள், மீன்கள் போன்றவற்றை வாங்கினார்கள். அங்கிருந்து கிளம்பினோம். சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகு, மெல்ல மெல்ல இருள் கவிழத் தொடங்கிய போது, ஓர் இடத்தில் எங்கள் படகு, கரை ஒதுங்கியது. இரவு உணவை முடித்து விட்டு அவரவர் அறையில் தங்கினோம். காலை உணவு முடிந்ததும் படகு ஆலப்புழா படகு இல்லத்தை நோக்கி விரைந்தது.
அடுத்து நாங்கள் சென்றது ஆலப்புழா கடற்கரை. அங்கிருந்து கொச்சின் துறைமுகம். அங்கே மீண்டும் படகில் வலம் வந்தோம். மீண்டும் ஹோட்டலுக்கு வந்த பிறகு, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பார்வையாளர் களும் பங்கேற்கும் படியான நிகழ்ச்சிகளும் நடந்தன. நண்பர்கள் உற்சாகமாக அவற்றில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் நடனக்கலைஞர்களுடன் நண்பர்கள் இணைந்து நடனமாடினர். அந்த உற்சாகத்துடன் இரவு உணவை முடித்துக்கொண்டு இனிமை யான இந்த சுற்றுலாவின் நினைவுகளைச் சுமந்து கொண்டு அவரவர்க்கான பேருந்தில் திருப்பூர் நோக்கி புறப்பட்டோம். கேரளாவும் அதன் இயற்கை சார்ந்த வாழ்வும் என்றைக்கும் மறக்காத நினைவு களை அனைவருக்கும் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.